சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் எனப் பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.
திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.
கருவளையம் / சுருக்கம்
கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள். பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும். பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.
இமை
விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.
புருவம்
கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம். அரை மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.





Post a Comment